பாஸ்கா
7ஆம் வாரம் - வியாழன்
முதல்
வாசகம்
உரோமையிலும்
நீர் சான்றுபகர வேண்டும்.
திருத்தூதர்
பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11
அந்நாள்களில்
யூதர்கள்
பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள்
என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர்
விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக்
குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப்
பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார்.
அவர்களுள்
ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர்
என்றும் பவுல் அறிந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன்.
பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில்
கூறினார்.
அவர்
இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர்
இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு
பேசியிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர்.
வாக்குவாதம்
முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர்
அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து
பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
மறுநாள்
இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, “துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்”
என்றார்.
ஆண்டவரின்
அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா
16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி:
1)
பல்லவி:
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
அல்லது:
அல்லேலூயா.
1
இறைவா,
என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2
நான்
ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு
இல்லை’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே
என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
7
எனக்கு
அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை
எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை
எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
9
என்
இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து
துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில்
நிலைத்திருக்கும்.
10
ஏனெனில்,
என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக்
காணவிடமாட்டீர். - பல்லவி
11
வாழ்வின்
வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில்
எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
யோவா
17: 21
அல்லேலூயா,
அல்லேலூயா! தந்தையே, நீர் என்னுள்ளும் நான்
உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர்
என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி
வாசகம்
அனைவரும்
முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!
✠ யோவான்
எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26
அக்காலத்தில்
இயேசு
வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும்
நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான்
உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர்
என்று உலகம் நம்பும்.
நாம்
ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய
மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர்
என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர்
எனவும் நீர் என்மீது அன்பு
கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு
கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.
தந்தையே,
உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு
கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள்
என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே
என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீதியுள்ள
தந்தையே, உலகு உம்மை அறியவில்லை;
ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன்.
நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள்.
நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த
அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”
ஆண்டவரின்
அருள்வாக்கு.
0 Comments